

திருத்தணி: திருத்தணி பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அரக்கோணம் தொகுதியின் இண்டியா கூட்டணி சார்பில், திமுகவை சேர்ந்த தற்போதைய எம்.பி. ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று திருத்தணியில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ஜெகத்ரட்ச கனுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, மக்கள் மத்தியில் அமைச்சர் பேசியதாவது: மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மோடியின் தலையில் கொட்டும் கொட்டு. மக்களவை தேர்தலில், வாக்காளர்கள் அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகனை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.
அவ்வாறு வெற்றி பெற செய்தால் மாதத்துக்கு இரு முறை நான் அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு வந்து, ஜெகத்ரட்சகன், அமைச்சர் காந்தி, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து, அரக்கோணம் தொகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவேன். திருத்தணி பகுதியில் ஜவுளி பூங்கா, சிப்காட் தொழிற் பூங்கா,அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.