செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி வழங்க கோரிக்கை

செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில், செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று வாதிடப்பட்டிருந்தது.

அமலாக்கத் துறை தரப்பில், ஆதாரங்களின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை முடக்கும் நோக்கில் செந்தில் பாலாஜி சார்பில் தொடர்ச்சியாக மனு தாக்கல் செய்யப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை மார்ச் 28-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த ஆவணங்கள் கிடைத்த பின்னர் அதன் அடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும்.

அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். எனவே, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in