ராயபுரம் வேனில் கட்டுகட்டாக ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல்: ஏடிஎம் பணம் என்பதால் விடுவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ராயபுரத்தில் வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.28 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அது ஏடிஎம்-மில் நிரப்ப கொண்டுசெல்லப்பட்டது என தெரிந்ததால் திரும்பி ஒப்படைக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தனி நபர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் அதற்கான ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

இல்லை என்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதை பறிமுதல் செய்வார்கள். பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் போலீஸாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பறக்கும் படையினர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ராயபுரம் என்ஆர்டி பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தவழியாக வந்த வேன் ஒன்றை மறித்து சோதித்தனர். அதில், கட்டுக்கட்டாக ரூ.1 கோடியே 28 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. இதுபற்றி பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பணத்தை கொண்டு வந்த தனியார் ஏஜென்சி நிறுவன ஊழியர்களிடம் பணத்துக்கான ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அரசு கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில், வேனில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என தெரியவந்தது. அதற்கான ஆவணங்களை வருமானவரித் துறை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் வழங்கியது. இதையடுத்து, பணம்சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in