Published : 25 Mar 2024 12:23 AM
Last Updated : 25 Mar 2024 12:23 AM

“தமிழகத்தின் நிதி உரிமை, கல்வி உரிமையை பாஜக பறிக்கிறது” - உதயநிதி @ மதுரை

மதுரை: நமது மொழி உரிமை, நிதி உரிமை, கல்வி உரிமையை பாஜக அரசு பறிக்கிறது என்று மதுரையில் பிரச்சாரக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார்,

மதுரை ஊமச்சிகுளத்தில் இன்று திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இங்கு மக்கள் எழுச்சியை பார்க்கும்போது சு.வெங்கடேசன் 200 சதவீத வெற்றி நிச்சயம் என்று என்னால் சொல்ல முடிகிறது. இது பிரச்சாரக் கூட்டம் மாதிரி இல்லை, வெற்றி விழா கூட்டம் போல் இருக்கிறது. கடந்த தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தீர்கள். ஆனால் இம்முறை குறைந்தது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பீர்களா?

எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டில் பிரதமர் மோடி ஒரு தடவையாவது தமிழகத்திற்கு வந்தாரா? கடந்த 2019ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்தார். அதற்குப்பின் வரவில்லை. தமிழகத்தோடு அறிவித்த எய்ம்ஸ் மற்ற மாநிலங்களில் கட்டி முடித்து செயல்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு மட்டும் நிதி இல்லை என்கிறார்.

தமிழ் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காத பிரதமர் மோடி, யாரும் பேசாத சமஸ்கிருதத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து வரிப் பணமாக 5 ஆண்டுகளில் ஆறரை லட்சம் கோடி கட்டியுள்ளோம். ஆனால் ஒன்றரை லட்சம் கோடியை மட்டும் தமிழகத்திற்கு திருப்பி வழங்கியுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வாரி வழங்குகின்றனர்.

தமிழகத்திற்கு பாஜக ஓரவஞ்சனை செய்கிறது. தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கின்றது. இப்படி நமது மொழி உரிமை, நிதி உரிமை, கல்வி உரிமையை பறிக்கின்றனர். இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கித் தரப்படும் என்று தமிழக முதல்வர் சொல்லியுள்ளார். 2014ல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.450 இருந்துச்சு. இப்போது ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. தேர்தலுக்காக ரூ.100 குறைத்துள்ளார் மோடி. அதை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ரூ. 500 ஏற்றினாலும் ஏற்றுவார்.

கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக இண்டியா கூட்டணி போட்டியிடும் 40க்கு 40 ஜெயித்து அவரது காலடியில் வைக்க வேண்டும். உங்களின் குரலாக ஒலிக்கும் சு.வெங்கடேசனை வாக்களித்து வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள்” என்று உதயநிதி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x