தருமபுரி | வேட்பு மனு தாக்கலுக்கு முதல் நபராக வருகை தந்த தேர்தல் மன்னன் பத்மராஜன்

தேர்தல் மன்னன் பத்மராஜன்
தேர்தல் மன்னன் பத்மராஜன்
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதியில் முதல் நபராக தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்ய தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். ஹோமியோபதி மருத்துவரான இவருக்கு தேர்தல்களில் போட்டியிடுவது விருப்பமான செயல். இதுவரை இந்தியா முழுக்க எம்எல்ஏ தேர்தல்கள், எம்.பி தேர்தல்கள், மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல்கள், குடியரசு தலைவருக்கான தேர்தல் என இதுவரை 238 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் இதுவரை ஒரு முறை கூட டெபாசிட் தொகையை அவர் பெற்றதில்லை. சாதனை நிகழ்வுக்காக இச்செயலில் ஈடுபட்டு வருவதாகக் கூறும் பத்மராஜன், இன்று (20-ம் தேதி) தனது 239 வது வேட்பு மனுவை தருமபுரி மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்ய முதல் நபராக தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்தார்.

அரசியல் கட்சி வேட்பாளர்கள் தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கலுக்கு வருகை தந்து பரபரப்பு ஏற்படுத்தும் நிலையில், தேர்தல் மன்னன் பத்மராஜன் தனது மகனை மட்டும் உடன் அழைத்து வந்து காவல்துறையிடம் அனுமதி பெற்று எளிமையாக வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in