Published : 20 Mar 2024 06:10 AM
Last Updated : 20 Mar 2024 06:10 AM

தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அச்சகம், அடகு கடை, திருமண மண்டபம் உரிமையாளர்களுக்கு அறிவுரை

செங்கல்பட்டு/திருவள்ளூர்: செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டபஉரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகுக் கடை நடத்துவோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமை தாங்கி, வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

அதிக அளவிலான பணப்பட்டுவாடா நடக்கும் பட்சத்தில் அதுகுறித்து வங்கி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அதேபோல் உணவகம் அல்லது விடுதியில் சந்தேகத்துக்கிடமான வெளி நபர்கள் தங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. திருமண மண்டபத்தில் அனுமதியில்லாமல் கட்சிக் கூட்டமோ அதையொட்டி எந்த நிகழ்வுகளோ நடக்க அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்த புகார்களை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும், சி-விஜில் செயலி மூலமாகவும் தெரிவிக்க வேண்டும்.

நகை அடகுக் கடை உரிமையாளர்கள் தினசரி நகை அடகுவிவரங்களை வட்ட அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும். மேலும்,தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில், அது தொடர்பான புகாரை அனைத்து தரப்பினரும், மாவட்ட ஆட்சியரகத்தில் நிறுவப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

மொத்தமாக நகை மீட்பு கூடாது: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சுகபுத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது ஆட்சியர் கூறும்போது, ``திருமண மண்டபங்கள், கூட்ட அரங்கங்களில் அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால், அதன் விவரங்களை முன்கூட்டியே தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

சுப நிகழ்வுகள் என்ற பெயரில் மக்களைக் கூட்டி பரிசுப் பொருட்கள் வழங்குவது, புடவை வேட்டிகள் வழங்குவது, பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறியப்பட்டால் அதையும் உடனடியாக தெரியப் படுத்த வேண்டும்.

அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களால் மொத்தமாக மீட்கப்பட்டு வாக்காளர்களுக்குத் திருப்பி வழங்கப்படுவதை அடகுக் கடை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்ய யாராவது முற்பட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 1800-599-5669, 044 27660641, வாட்ஸ்-அப் எண் .8438538757 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x