திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க உயர் நீதின்றம் அனுமதி

சீல் வைக்கப்பட்ட திரவுபதி அம்மன் கோயில் | கோப்புப்படம்
சீல் வைக்கப்பட்ட திரவுபதி அம்மன் கோயில் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக மூடப்பட்டுள்ள திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க அனுமதியளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பூசாரியை தவிர கோயிலுக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோயிலை அடைத்து சீல் வைக்கப்பட்டது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோயிலில் தினசரி பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட வேண்டும், என கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோயிலைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்தனர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று கூறினார். தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பூஜைகளுக்காக கோயில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோயிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், கோயிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறையின் விழுப்புரம் இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்ததும் கோயிலை பூட்டிவிட வேண்டும். யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது.

பூஜைக்காக கோயில் திறக்கப்படும் போது எந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த யாரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு நடந்தால், கோயிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என எச்சரித்து, விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in