கோவை மாநகரில் இதுவரை 250 பேர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

கோவை மாநகரில் இதுவரை 250 பேர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு
Updated on
1 min read

கோவை: மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப் பட்டுள்ளதால், கோவை மாநகரில் இதுவரை 250 பேர் துப்பாக்கிகளை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் துறை சார்பில் 875 பேருக்கு, அவர்களின் சுய பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்க துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் துறையிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர தேர்தல் பிரிவு காவல் துறையினர் கூறும்போது, ‘‘துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களிலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் படைக்கலன் பாதுகாப்பு மையங்களிலோ ஒப்படைக்கலாம். இதுவரை 250 பேர் துப் பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ளவர்களிடமும் விரைவில் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளோம்.

வங்கி சார்ந்த பாதுகாப்பு பணிகளில் இருப்பவர்கள், ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள், துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் ஆகியோருக்கு துப்பாக்கிகளை ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்த பின்னர், தொடர்புடையவர்கள் துப்பாக்கிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றனர்.

இதே போல், மாவட்ட காவல் துறையினரும் தங்களது பகுதிகளில் உரிமம் பெற்று சுய பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை பயன்படுத்துபவர்கள் அவற்றை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in