Published : 18 Mar 2024 07:58 PM
Last Updated : 18 Mar 2024 07:58 PM

பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திரும்பப் பெற உத்தரவிட முடியாது: ஐகோர்ட்

சென்னை: பட்டியல் சமூக நலனுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை திரும்பப் பெற அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு கடந்த 1998-ம் ஆண்டு பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த வீடற்ற 91 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களில் இதுவரை யாரும் வீடுகள் கட்டாததால், இலவச மனைகளை திரும்பப் பெற்று அரசின் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நாராயணசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இலவசமாக கொடுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களைத் திரும்பப் பெற உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற காலியாக உள்ள மனைகளைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,மனை ஒதுக்கப்பட்டவர்கள்,பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீடுகள் கட்டடாமல் இருக்கலாம். அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்களது பட்டாவைத் திரும்ப பெற்றால் அரசின் நோக்கம் பாதிக்கப்படும். எனவே, பட்டியல் சமூகத்தினருக்கு அரசு நிலம் ஒதுக்கியதால் மனுதாரர் பாதிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x