கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த ஈரம், உலர் கழிவுகளின் செயலாக்க நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த ஈரம், உலர் கழிவுகளின் செயலாக்க நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கொடுங்கையூரில் ஒருங்கிணைந்த ஈரம் மற்றும் உலர் கழிவுகளின் செயலாக்க நிலையங்கள் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் தினசரி 6150 டன் திடக்கழிவு உருவாகிறது. இதை மேலாண்மை செய்ய சென்னை மாநகராட்சியில் நிறுவப்பட்டுள்ள பரவலாக்கப்பட்ட பல திடக்கழிவுகள் பதனிடுதல் மையங்களுக்கு, திடக்கழிவுகளானது ஈரம் மற்றும் உலர் கழிவுகளாக அனுப்பப்படுகிறது. மீதமுள்ளவை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் தினசரி உருவாகும் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகள்படி பதனிடுதலுக்குட்படுத்த கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் ஒருங்கிணைந்த திடக்கழிவு செயலாக்க மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் சந்தைகள் மற்றும் பெருமளவு கழிவுகள் உருவாக்குபவர்களிடமிருந்து பெறப்படும் ஈரக்கழிவுகளை செயலாக்கம் செய்ய 550 டன் கொள்ளளவு கொண்ட உயிரி எரிவாயு நிலையம் அமைக்கப்படுகிறது.

மண்டலம் 1 முதல் 8 வரை உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து உருவாகும் ஈரக்கழிவுகளை பதனிட 800 டன் கொள்ளளவு கொண்ட இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படுகிறது. இப்பகுதியில் உருவாகும் உலர் கழிவுகளை மறு சுழற்சி செய்ய 1200 டன் கொள்ளளவு தானியங்கி பொருள் மீட்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

மண்டலம் 1 முதல் 15 வரை உருவாகும் மறு சுழற்சி செய்ய இயலாத எரியக்கூடிய உலர் கழிவுகளை செயலாக்கம் செய்ய 21 மெகா வாட் திறன் கொண்ட திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழிகாட்டுதலின்படி, மண்டலம் 1 முதல் 8 வரையிலானவற்றிலிருந்து உருவாகும் குப்பையிலிருந்து மின்சாரம், ஈரக்கழிவுகளை உரமாக்குதல், உயிரி எரிவாயு, உலர்கழிவுகளை தரம் பிரித்து அதற்குரிய பதனிடுதலுக்கு உட்படுத்துதல் போன்றவற்றை ஒருங்கிணைந்து திட்டமாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் செயலாக்கம் செய்யவும், மண்டலம் 9 முதல் 15 வரையானவற்றிலிருந்து உருவாகும் உலர் எரிக்கும் தன்மையுடையவற்றையும் கொடுங்கையூர் வளாகத்தில் ஏற்பதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதியளித்துள்ளார்.

இதற்கான எதிர்ப்பார்க்கப்படும் வருடாந்திர பதனிடுதல் செலவு தொகையை சென்னை மாநகராட்சி அரசு, தூய்மை இந்தியா திட்டம், வெளியிலிருந்து நிதி ஆதாரத்தின் மூலமாக மேற்கொள்ளவும் நிர்வாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in