புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் தற்கொலை நாடகம் - போலீஸ் தகவல்

கருணாஸ், விவேகானந்தன்
கருணாஸ், விவேகானந்தன்
Updated on
1 min read

புதுச்சேரி: 9வயது சிறுமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதானவர்களில் ஒருவரான விவேகானந்தன் தற்கொலை நாடகம் ஆடுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விவேகானந்தன், கருணாஸ் என்ற இருவர் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தாமல் சிறைக்கு அழைத்துச் சென்று நேரடியாக நீதிபதி அங்கு சென்று உத்தரவு பிறப்பித்தார்.

கைதாகியுள்ள விவேகானந்தன், கருணாஸ் இருவரும் மத்திய சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விவேகானந்தன் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் பரவியது.

இதுபற்றி சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “தற்கொலை முயற்சி நடந்திருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க தேவைப்பட்டிருக்கும். விவேகானந்தன் சிறையில் அடைபட்டிருக்க அந்த அறை முழுவதும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் விவேகானந்தன் தற்கொலை நாடகம் ஆடுவதாக அவ்வப்போது நடக்கிறது. குளியல் சோப்பினை சாப்பிடுவது, சட்டையால் முகத்தை மூடி இறுக்கிக்கொள்வது என பல வழிகளில் தற்கொலை நாடகம் ஆடி சிறை ஊழியர்களை தொந்தரவு செய்து வருகிறான்” என குறிப்பிட்டனர்.

போலீஸார் இன்று மனுதாக்கல்: போலீஸார் தரப்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விசாரித்தபோது, அவர்கள் கூறுகையில், “சிறுமி சடலம் எடுக்கப்பட்ட இடத்தில் இருந்த சிறுமி காலணி, உடை, பெட்ஷீட், வேட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளோம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் உள்ளோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in