

சென்னை: கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க, மின்மாற்றிகள், கேபிள்களை சீரமைக்க சிறப்பு பராமரிப்பு பணியை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
அண்மைக் காலமாக தினசரிமின்தேவை அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு ஏப்.20-ம் தேதிதினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 19,347 மெகாவாட் அளவுக்குஅதிகரித்தது. இதுவே இதுவரையிலான உச்சபட்ச மின்தேவை அளவாக உள்ளது. இந்நிலையில், வரும் கோடைகாலத்தில் தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 20 ஆயிரம்மெகாவாட் வரை அதிகரிக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோடை காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் சிறப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கோடை காலத்தில் ஏசி, ஏர்கூலர், மின்விசிறிகள், பிரிட்ஜ் உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். மேலும் இந்த ஆண்டு கோடையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தினசரி மின்தேவை 20, 744 மெகாவாட் அளவை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கோடையில் அதிக வெப்பம் காரணமாக, மின்விநியோகம் செய்யப்படும் கேபிள்கள், மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபார்மர்) உள்ளிட்டவற்றில் அடிக்கடி பழுதுஏற்படுகிறது. இதனால், மின்வெட்டு, குறைந்தழுத்த மின்விநியோகம் உள்ளிட்ட பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக துணைமின் நிலையங்கள் அருகில்உள்ள மின்மாற்றிகள் பராமரிக்கப்பட்டு அவற்றின் தரம் உயர்த்தப்படும். அதே போல், தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படும். குறிப்பாக, குறைந்தழுத்த மின்விநியோகம் செய்யப்படும் இடங்களில் அப்பிரச்சினையைத் தீர்க்க கேபிள்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை மாற்றப்படும்.