Published : 07 Mar 2024 04:54 AM
Last Updated : 07 Mar 2024 04:54 AM

அரசு திட்ட பயன்கள் குறித்து மக்களை தொடர்பு கொண்டு கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ திட்டம் தொடங்கினார் ஸ்டாலின்

‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை, சென்னையில் உள்ள அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை: அரசு திட்டங்களின் பயன்கள்குறித்து முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெயலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயனாளிகளிடம் உரையாடினார்.

அரசு திட்டங்களின் பயன்கள் உடனுக்குடன் மக்களுக்கு சென்று சேர்வதை, பயனாளிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளும் வகையில் ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்து வரும்சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையை சேர்ந்த தனலட்சுமி (மகளிர் உரிமை தொகை), திருவள்ளூர் மாவட்டம் சோரஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி2-ம் வகுப்பு மாணவன் பவனேஷின் தந்தை பிரபு (முதல்வரின் காலை உணவு), செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் கதிரவன் (‘நான் முதல்வன்’), செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் நஸ்ரின் (‘புதுமைப்பெண்’), பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதியில் தங்கியுள்ள சீர்காழி ஸ்வாதி முரளி, காணாமல்போன மகளை கண்டுபிடித்து தருமாறு முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்து பயன்பெற்ற திருத்தணி ஜெ.கே.குமார் ஆகியோரிடம் பயன்பெற்ற விவரங்களை தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இத்திட்டம் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் முதன்மையான நோக்கம். தமிழகத்தில் மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், முதல்வரின் காலை உணவு, கலைஞர் மகளிர் உரிமை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதல்வர் என திட்டங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து வருகின்றன. இவை ஒவ்வொரு குடும்பத்தையும், தனிமனிதரையும் மேம்படுத்தும் திட்டங்கள் ஆகும்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் 1.15 கோடி பெண்கள் மாதம்தோறும் ரூ.1,000 உரிமை தொகை பெறுகின்றனர். விடியல் பயண திட்டத்தில் பெண்கள் 445 கோடி முறை பயணித்து மாதம் ரூ.888 வரை சேமிக்கின்றனர். ஒரு கோடி பேர், ‘மக்களை தேடிமருத்துவம்’ திட்டத்திலும், 16 லட்சம் மாணவர்கள் காலை உணவு திட்டத்திலும், புதுமைப்பெண் திட்டத்தில் 4.81 லட்சம் மாணவிகள் மாதம் ரூ.1,000 பெற்றும் பயனடைகின்றனர்.

நான் முதல்வன் திட்டத்தில் 28 லட்சம் இளைஞர்கள், இல்லம் தேடி கல்வியில் 24.86 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். புதிய குடிநீர் இணைப்பை 62.40 லட்சம் பேர், புதிய இலவச மின் இணைப்பை 2 லட்சம் பேர், உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 30 லட்சம்முதியோர், 5 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பெறுகின்றனர்.

‘நம்மை காக்கும் 48’ திட்டத்தில் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரிதிட்டத்தில் 19.69 லட்சம் பேருக்குபயனளிக்கும் மனுக்களுக்கும், மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் 3.40 லட்சம் மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இந்த அரசு வெற்றிகண்டுள்ளது. எங்களை சிலர்குடும்ப ஆட்சி என்கின்றனர். ஆம்,இது குடும்ப ஆட்சிதான். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் கைதூக்கிவிடும் ஆட்சி.

ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ஏராளமான மனுக்கள் என்னிடம்வழங்கப்பட்டன. அந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியதால், இப்போது மக்களின் கைகளில் மனுக்களை காணமுடியவில்லை. முகங்களில் மகிழ்ச்சியை காண்கிறேன். அந்த மகிழ்ச்சியை மேலும்உறுதிசெய்ய தொடங்கப்பட்டதுதான் ‘நீங்கள் நலமா’ திட்டம்.

இத்திட்டத்தை செயல்படுத்தஉருவாக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்து, சிலபயனாளிகளிடம் உரையாடி அவர்களது கருத்துகளை கேட்டறிந்தேன். ஒவ்வொரு குடும்பத்தின் குரலையும் கேட்டு அவர்களது குறைகளை போக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

அதேபோல, அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை பெற்று, அதன் அடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். பயனாளிகளின் கருத்துகள் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம், இந்த அரசின் நலம்,தமிழகத்தின் நலம். அந்த நலனை காக்க நான் உழைப்பதன் மற்றும்ஒரு அடையாளம்தான் ‘நீங்கள் நலமா’ திட்டம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உங்கள் அரசு தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிவுறுத்தலின்படி, துரைமுருகன், கே.என்.நேரு,எ.வ.வேலு, தங்கம் தென்னரசு,பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்து பயன் பெற்றவர்களிடம் தொலைபேசி, காணொலி மூலம் பேசி, கருத்துகளை கேட்டறிந்தனர்.

தொடக்க விழாவில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா,முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் த.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x