வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைக்க ரூ.45.84 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கடந்த டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட புயல், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.45.84 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2023 டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.

அவ்வாறு மழைவெள்ளத்தினால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2 லட்சம் வரையும் முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இவ்வறிவிப்பிற்கிணங்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதமடைந்த 955 வீடுகளுக்கு பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்துக்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ.45.84 கோடி வழங்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in