Published : 28 Feb 2024 06:20 AM
Last Updated : 28 Feb 2024 06:20 AM

மிக்ஜாம் புயலால் சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களை சீரமைக்க ரூ.12.88 கோடி நிவாரணத் தொகை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , ஆர்.காந்தி, பி.கே .சேகர்பாபு, எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, துறை செயலர் மங்கத் ராம் சர்மா , சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை: சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களை சீரமைக்க ரூ.12.88 கோடி நிவாரணத் தொகையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களை சீரமைப்பதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மிக்ஜாம் புயல் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை ஈடு செய்யும் வகையில் ரூ.12.88 கோடி நிவாரணத் தொகையை மீனவர்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மாணவர்கள் மீது அதிமுக அரசு தாக்குதல் நடத்தியது. அப்போது, மாணவர்களை காப்பாற்ற போராடியவர்கள் மீனவர்கள். ஊட்டச்சத்து மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கு மீனவர்கள் ஒரு முக்கியகாரணம்.

அவர்களுக்காக பல்வேறுநலத் திட்டங்களை முதல்வர் செய்து கொடுத்துள்ளார். மீனவ நலவாரிய உறுப்பினர்கள் காலமானால் குடும்பத்தினருக்கு ரூ.25ஆயிரமாக இழப்பீட்டு தொகைஉயர்வு, மீன்வள பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு 20 சதவீதமாக உயர்வு, ரூ.2.40 லட்சமாக வீடு கட்டும் தொகை உயர்வு போன்றவற்றை கடும் நிதி நெருக்கடிக்கு இடையில் முதல்வர் செய்து கொடுத்துள்ளார். மீனவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை அருகிலுள்ள மாநிலங்களும் பின்பற்றுகின்றன. இதுபோன்ற திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். அரசின் தூதுவர்களாக மீனவர்கள் இருந்து அரசுக்கும், முதல்வருக்கும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x