அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி மனு: இபிஎஸ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி மனு: இபிஎஸ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது பேச்சு பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்த விவகாரத்தில் உதயநிதி செப்டம்பர் 7-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து நான் தேடிக்கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது என்றும், ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என்றும் பேசியுள்ளார்.

அவரது அறிக்கை தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும் உள்ளன. எனவே, தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “எதன் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் ஈ.வி.சந்துரு, “இந்த விவகாரத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முகாந்திரமே இல்லை. பொது வாழ்வில் இருக்கும் நபர் ஒருவர் குறித்து பொதுவாழ்வில் இருக்கும் மற்றொரு நபர் பேசியதில் தவறில்லை. பொது வெளியில் நடந்ததை பற்றியே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தனிப்பட்ட விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை” என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உதயநிதி ஸ்டாலினின் மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்டு இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in