Published : 24 Feb 2024 06:10 AM
Last Updated : 24 Feb 2024 06:10 AM

நிதி நெருக்கடியை சரிசெய்ய வலியுறுத்தி சென்னை பல்கலை. பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

நிதி நெருக்கடியை சரி செய்ய வலியுறுத்தி, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை சரி செய்யக்கோரி பேராசிரியர்கள், பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிதிப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் பல்கலை. கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2017 முதல் 2021-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் ரூ.424 கோடி வருமானவரி நிலுவைத் தொகை கட்ட வேண்டுமெனக் கூறி பல்கலைக்கழகத்தின் 30-க்கும் மேலான வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டன. இதனால் பல்கலை.யின் செயல்பாடுகள் முடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிதி சிக்கலை சரிசெய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தி சென்னை பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும்மேற்பட்ட பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் பேரவைத்தலைவர் சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது: பல்கலை. வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்காலிக பணியாளர்களுக்கு மாதஊதியம் வழங்க முடியாத சூழல்உள்ளது. அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும், பல்கலை.க்கு வழங்கவேண்டிய மானியத் தொகையை உடனே அரசு வழங்க வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்டபோராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சரிசெய்ய நடவடிக்கை: உயர்கல்வித் துறை செயலாளர்கார்த்திக்கை, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலைநேற்று நேரில் சந்தித்தார். அப்போது, சென்னை பல்கலைக்கழகத்தின் நிதிச் சிக்கல் தொடர்பாகவும், தமிழக அரசு தரப்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் குறித்தும் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, பல்கலை.யின் நிதி நிலையைச் சரிசெய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x