மாவட்ட தலைநகரங்களில் பிப்.26 முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: மாவட்டத் தலைநகரங்களில் பிப்.26-ம் தேதிமுதல் போராட்டம் நடைபெறும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு மே 31-ம் தேதி தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ம்தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு நாள்வித்தியாசத்தில், ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்டவர்கள் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைவாக பெற்றுவருகின்றனர். அந்த வகையில் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை பள்ளிக் கல்வி வளாகம் அருகில் கடந்த 19-ம்தேதிமுதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இருப்பினும் ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் எஸ்எஸ்டிஏ பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் கூறும்போது, கடந்த5 நாட்களாக டிபிஐ வளாகத்தில் தொடர் முற்றுகைபோராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டம் இன்றும், நாளையும் தொடரும். இதுவரை அரசுஎங்களை அழைத்து கோரிக்கை குறித்து பேசி முடிவு செய்யாத காரணத்தால் அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராகியுள்ளோம்.

மீதமிருக்கும் இரு நாள்களுக்குள் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிப்.26-ம் தேதி முதல் மாநிலத்தின் தலைநகரான சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டம், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in