Last Updated : 23 Feb, 2024 08:24 PM

 

Published : 23 Feb 2024 08:24 PM
Last Updated : 23 Feb 2024 08:24 PM

3 மாத சம்பள நிலுவை வழங்க நடவடிக்கை: பணிக்குத் திரும்பிய காமராசர் பல்கலை. ஊழியர்கள்

மதுரை: மூன்று மாத சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதற்கான அரசு உத்தரவை அடுத்து போராட்டத்தை கைவிட்டு காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் பணிக்கு திரும்பினர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியாத சூழல் உள்ளது. கடந்த 2 மாதமாக சம்பளம், ஓய்வூதியம் கிடைக்கவில்லை. விரைந்து சம்பளம், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி பல்கலை நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் பேராசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், விரைந்து சம்பளம் வழங்கக் கோரி கடந்த 14-ம் தேதி முதல் பல்கலை அலுவலர் சங்கத்தினர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். பல்கலை துணைவேந்தர் ஜெ.குமார், பதிவாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளம், ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.

ஆனாலும், நடவடிக்கை இன்றி உள்ளிருப்புப் போராட்டம் தொடர்ந்தது. பல்கலை நிர்வாகப் பணிகள் பாதித்தன. விடைத்தாள் திருத்தும் பணியும் தொடர்ந்து பாதிப்பதால் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு முடிவு வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும் என, மாணவர்கள், பெற்றோர் தரப்பில் புகார் எழுந்தது.

இந்நிலையில், இன்று மதியம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்கள், ஒய்வூதியர்கள் சங்கத்தினரிடம் துணைவேந்தர் ஜே.குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பளம், ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் திரும்பபெற்று, மதியத்துக்கு மேல் பணிக்குத் திரும்பினர்.

அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் முத்தையா, சுந்தரமூர்த்தி கூறுகையில், ''தொடர் நிதி நெருக்கடியை சமாளிக்க பல்கலை நிர்வாகம் முயற்சி எடுக்கவில்லை. சம்பளம், ஓய்வூதியம் இன்றி பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். அன்றாட செலவினங்களுக்கும் சிரமப்படுகிறோம். போராட்டத்தால் பல்கலை.யின் பல பணிகளும் தொடர்ந்து பாதிக்கும் நிலையில், துணை வேந்தர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம், ஓய்வூதிய தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் போராட்டத்தை கைவிடுங்கள் எனவும் வலியுறுத்தினார். அவரது பேச்சை நம்பி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புகிறோம். 3 மாதத்திற்கான சம்பளம், ஓய்வூதிய தொகையை வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பேராசிரியர்கள், அலுவலர்கள் சங்கம் சார்பில், நன்றியை தெரிவிக்கிறோம்,'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x