

சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக, பரங்கிமலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, பரங்கிமலை பகுதியில் 21-ம் தேதி (இன்று) முதல் ஒரு வாரகாலத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்.கே.என்.சாலை மற்றும் ரயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்துவரும் வாகனங்கள், நேராக பரங்கிமலை அஞ்சல் நிலையம் நோக்கி செல்ல அனுமதிஇல்லை. ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் செல்வதற்கு வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ செல்லலாம்.