Published : 21 Feb 2024 06:14 AM
Last Updated : 21 Feb 2024 06:14 AM

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை

சென்னை: தமிழக பட்ஜெட்டில், விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டத்துக்கு மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் பயணிகள், பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில், இந்த திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ தொலைவில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டது. இப்பாதை மற்றும் 12 நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.4,500 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் இருந்து எந்தவித ஒப்புதலும் கிடைக்காமல் இருந்தது.

இதற்கிடையில், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்தடிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்துக்கு நேரடியாக செல்ல மின்சார ரயில்மற்றும் மெட்ரோ ரயில் வசதி கிடையாது. இதுதவிர, நகரின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல போதிய இணைப்பு வாகன வசதி இல்லாததால் பயணிகள் சிரமப்பட்டனர்.

தற்போது, இணைப்பு வாகனவசதி படிப்படியாக ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும், விரைவாக செல்ல மெட்ரோ ரயில் சேவை வழங்க வேண்டும் என்றும், இதற்காக, விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ளபேருந்து முனையம் வரை மெட்ரோரயிலை நீட்டிப்பதற்கான விரிவானதிட்ட அறிக்கை ரூ.4.625 கோடிமதிப்பில் பெறப்பட்டு, மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என்றுதெரிவிக்கப்பட்டது. இதற்கு மெட்ரோ ரயில் பயணிகள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இத்திட்டத்தை விரைந்துசெயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் கூறுகையில், “சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோரயில் விரிவாக்கம் திட்டத்துக்கு மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைநாங்கள் வரவேற்கிறோம்.

அதேநேரத்தில், மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக, காத்திருக்காமல், மாநில அரசு மூலதனபங்களிப்பு செய்து, நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவாக தொடங்க வேண்டும். இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x