Published : 15 Feb 2024 05:12 AM
Last Updated : 15 Feb 2024 05:12 AM

பிப்.24-ல் ஜெயலலிதா பிறந்தநாள் விழா | தமிழகம் முழுவதும் அதிமுக 5 நாள் பொதுக்கூட்டம்: சேலம் கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்பு

சென்னை: அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பிப்.24 முதல் 28-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. சேலத்தில் 25-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா, பிப்.24-ம் தேதி அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிப்.24 முதல் 28-ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள், கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலும், அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் தொகுதி கொண்டலாம்பட்டியில் 25-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நான் (பழனிசாமி) பங்கேற்று உரையாற்றுகிறேன். கட்சி எம்எல்ஏக்களும், கட்சியின் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வார்கள்.

மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து, சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x