Published : 13 Feb 2024 06:16 AM
Last Updated : 13 Feb 2024 06:16 AM

பிப்.15 வரை ஆளுநர் உரை மீதான விவாதம்; பிப்.19 முதல் 22 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தகவல்

சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல்கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில், பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிப்.13-ம்தேதி பேரவையில், முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்படும். அதைத்தொடர்ந்து, ஆளுநர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும். தொடர்ந்து, 14-ம் தேதியும் விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும். 15-ம்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிப்பார். அத்துடன், பேரவை கூட்டத்தொடர் முடிந்துவிடும்.

மீண்டும் பிப்.19-ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகஅரசின் பட்ஜெட்டையும், 20-ம்தேதி வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்வார்கள். அதைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதானவிவாதம் தொடங்கும். பிப்.22-ம்தேதி நிதி மற்றும் வேளாண் அமைச்சர்கள் பதிலுரை அளிப்பார்கள்.

சட்டப்பேரவைக்குள் ஆளுநர் வந்ததும் பேரவை விதிகள் படி,தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்உரை மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும். சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவதுதான் மரபு. பல மாநிலங்களில் ஆளுநரை அழைப்பதே இல்லை. தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது, ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனை அழைக்கவில்லை. தமிழகத்தில் சட்டத்தையும், மாண்பையும் மதிக்கிறோம்.

கொள்கை, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஆளுநரைஅழைக்க வேண்டும் என்றமாண்பை தமிழக முதல்வர் கடைபிடிக்கிறார். எழுதிக் கொடுத்த உரை, ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர்தான் அச்சடிக்கப்பட்டுள்ளது. நாகரீகமான உரை யைத்தான் அளித்துள்ளோம். ஆனால், ஆளுநர் முதல் பக்கத்தின்உரையை வாசித்துவிட்டு, இறுதியாக கடைசி பக்கத்துடன் நிறுத்தி விட்டார். அதன்பின் தன் கருத்தை கூறுகிறார்.

அரசியலமைப்புச் சட்டப்படி,மரபுப்படி பேரவை நடைபெறுகிறது. இதில் மரபை, விதிகளை மாற்றி விருப்பத்தை தெரிவிப்பது முறையல்ல. அதேபோல், அவைமாண்புப்படி, தேசிய கீதம் பாடும்வரையாவது இருந்திருக்க வேண்டும். ஆளுநரின் எண்ணம் என்பது முதலில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்கிறார். ஆனால், தமிழகம் முழுவதுமே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் இசைக்கப்படும். இந்த நடைமுறையையே நாம் பின்பற்றி வருகிறோம். இந்த நாட்டில் தமிழகத்தைவிட சிறந்த தேசப்பற்று, சுதந்திரப் போராட்ட தியாகிகள் எங்கிருக்கிறார்கள்?

ஆளுநரை நாங்கள் நேரில் சென்று அழைக்கும்போது, அரசுதயாரித்து அளித்த உரை குறித்துஅவர் எந்த தகவலும் அளிக்கவில்லை. அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரைக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். எதையாவது மாற்ற வேண்டும் என்றால் முன்கூட்டியே தெரிவித்திருக்கலாம். அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளை நீக்க வேண்டும் என்று கூறி, நீக்காததால் இதை மட்டும் படிக்கிறேன் என்று கூறியிருக்கலாம். எழுதியிருப்பது ஒன்றுமே எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுவது என்ன நியாயம்.

தேசிய கீதம் தொடர்பாக ஏற்கெனவே ஆளுநர் கடிதம் அளித்துள்ளார். அப்போது பேரவை விதிகளைக் குறிப்பிட்டு, இப்படித்தான் செயல்படுவோம் என்று பதில் அளித்துள்ளோம். தமிழகத்தின் மரபை ஏன் மீற வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

தமிழகத்து மக்களுக்கு பிஎம் கேர் நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம்கோடியை ஆளுநர் வாங்கித்தர வேண்டும் என்ற எனது எண்ணத்தைத்தான் அவையில் தெரிவித் தேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x