சென்னையில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - உயர் நீதிமன்றம்

சென்னையில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் 10மாடிகள் கொண்ட எம்ஜிஎம் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமானப் பணிக்காக ஆழ்துளை அஸ்திவாரம் அமைக்கும்போது அப்பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதால், நேரக்கட்டுப்பாடு விதிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கட்டுமானப் பணிக்கு அனுமதி தரவில்லைஎன்றும், உரிய கட்டணம் செலுத்தும்பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மருத்துவமனை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதுதிட்ட அனுமதி பெறாமல் கடந்தஆண்டு ஜூலை முதல் மருத்துவமனை நிர்வாகம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என சிஎம்டிஏ-வுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிஎம்டிஏ தரப்பில், ‘‘சட்டவிரோத கட்டுமானங்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம்தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து தாமாக முன்வந்து இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், உரிய அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இதுபோன்ற அடுக்குமாடி கட்டிடங்களுக்கு கட்டுமானப் பணியின்போது ஏற்படும் ஒலிமாசுவை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏதேனும் நடைமுறைகள் உள்ளதா என்பது குறித்து தெரிவிக்காத தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்.27-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in