தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களையும் பாதுகாக்கவும்: அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்துன் அனைத்து சதுப்பு நிலங்களையும் முழுமையாக பாதுகாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று உலக சதுப்பு நில நாள் ( #WorldWetlandsDay ). நீரும் நிலமும் சேருகின்ற இடங்கள் அனைத்தும் சதுப்பு நிலங்களே ஆகும். குளம், குட்டை, ஏரி, கழிமுகம், முகத்துவாரம், சதுப்பளம், கடலோர சதுப்பு நிலக் காடுகள், காயல் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களையும் முழு அளவில் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பன்னாட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களை காப்பதற்கான உலகளாவிய உடன்படிக்கை ( Convention on Wetlands ), ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 1971 பிப்ரவரி 2ம் நாள் எட்டப்பட்டது. அதுவே உலக சதுப்பு நில நாளாக ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சதுப்பு நிலங்களும் மனித நலவாழ்வும்’ ( Wetlands and Human Wellbeing ) என்பது இந்த ஆண்டுக்கான உலக சதுப்பு நில நாள் முழக்கமாகும். இவ்வாண்டின் உலக சதுப்புநில நாள் கொண்டாடப்படும் முதன்மை நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 15 இடங்கள் பன்னாட்டு ராம்சார் சதுப்பு நிலங்கள் பட்டியலில் ( Ramsar List ) புதிதாக சேர்க்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும். உலக வங்கியின் ரூ. 2000 கோடி நிதியுதவியுடன் கடலோர மீளுருவாக்க திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்தகைய அறிவிப்புகள் உண்மையாகவே சுற்றுச்சூழலை காப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் அதையொட்டியுள்ள பகுதியை வலசை பறவைகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும். மேலும், எண்ணூர் கழிமுகப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலப் பகுதியாக அறிவிக்க வேண்டும். தமிழகத்துன் அனைத்து சதுப்பு நிலங்களையும் முழுமையாக பாதுகாக்க வேண்டும் என உலக சதுப்பு நில நாளில் வலியுறுத்துகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in