குழந்தைகள் மையங்களில் 2 - 6 வயதினருக்கு உணவூட்டு செலவை உயர்த்தி முதல்வர் உத்தரவு: 11.50 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர்

குழந்தைகள் மையங்களில் 2 - 6 வயதினருக்கு உணவூட்டு செலவை உயர்த்தி முதல்வர் உத்தரவு: 11.50 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 - 6 வயது குழந்தைகளுக்கான உணவூட்டு செலவு தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தின்கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2- 6 வயது குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டு செலவின தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 2 - 6 வயது குழந்தைகளுக்கு உணவூட்டு செலவினம் ஒரு பயனாளிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தினசரி காய்கறிகளுக்கான செலவு ரூ.1.33, உப்பு மற்றும் தாளித பொருட்களுக்கான செலவு 46 காசு, எரிபொருளுக்கான செலவு 60 காசு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காய்கறிக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களுக்கு 96 காசு, பயன்படுத்தாத நாட்களில் ரூ.1.10 என்று வழங்கப்பட்ட நிலையில், அது தற்போது ரூ.1.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு, தாளிதப் பொருட்கள், பருப்பு பயன்படுத்தும் நாட்களில் 30 காசு, பயன்படுத்தாத நாட்களில் 45 காசு என்று இருந்த நிலையில், தற்போது 46 காசு என்று உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல, எரிபொருளுக்கு 26 காசு என்று இருந்தது 60 காசு என்று உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பருப்பு பயன்படுத்தும் நாட்களில் ரூ.1.52, பயன்படுத்தாத நாட்களில் ரூ.1.81 என்று வழங்கப்பட்டு வந்தது தற்போது அனைத்து நாட்களிலும் ரூ.2.39 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு உணவூட்டு செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,114 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனால், தமிழகத்தில் குழந்தைகள் மையங்களில் உள்ள சத்துணவு திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in