டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று, நாளை லேசான மழை வாய்ப்பு

டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று, நாளை லேசான மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் (பிப். 1, 2) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், இன்றும் நாளையும் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

ஜன. 31-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி உதகையில் 7 டிகிரி. கொடைக்கானலில் 10 டிகிரி, குன்னூர் மற்றும் ஏற்காட்டில் 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in