வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென்மாவட்ட பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். உடன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர்.
மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். உடன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

சென்னை: வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோயம்பேட்டில் இருந்து இயங்கிவந்த அரசு போக்குவரத்துக் கழகத்தின் 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 20 சதவீத பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருச்சிக்கு 18 நடைகள், சேலத்துக்கு 17, விருத்தாசலத்துக்கு 6, கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரத்துக்கு 16, கும்பகோணத்துக்கு 14, சிதம்பரத்துக்கு 5, நெய்வேலிக்கு 11, புதுச்சேரி வழியாக கடலூருக்கு 5, திண்டிவனத்துக்கு 10, செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 22, போளூர் வந்தவாசிக்கு 20 நடைகள் என 160 நடைகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து திருப்பதிக்கு 90 நடைகள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனவே, வடசென்னை மக்கள் கிளாம்பாக்கம் சென்று மாறாமல் இங்கிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியும். இதனை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

பேருந்து முனையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டதால் அரசு பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை குறையவில்லை.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒப்பிடும்போது நடப்பாண்டு 2.40 லட்சம் பேர் அதிகமாகப் பயணித்துள்ளனர். வேலூர், ஆற்காடு, பெங்களூரு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், ஆந்திராவுக்குச் செல்லும் பேருந்துகள், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் 20 சதவீத பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in