Published : 30 Jan 2024 07:36 PM
Last Updated : 30 Jan 2024 07:36 PM

மதுரை எய்ம்ஸ்க்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்: மக்களவை தேர்தலால் வேகமெடுக்கும் கட்டுமானப் பணி?

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இன்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஜனவரி 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார். மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக கூறிய அவர், 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கவிட்ட நிலையில் தற்போது வரை கட்டுமானப் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக, திமுக கட்சிகள், எய்ம்ஸ் விவகாரத்தை அரசியல் செய்யும்நிலையில், கட்டுமானப்பணியை தொடங்குவதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

அதனால், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இரண்டேகால் வருடங்கள் கழித்துதான், ஒருவழியாக கடன் ஒப்பந்தம் மார்ச் 2021ல் செய்யப்பட்டது. கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 எம்பிக்கள் வைத்துள்ள திமுக கூட்டணி கட்சிகளும், மதுரை எய்ம்ஸ்க்காக மிகப்பெரிய பேராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மதுரை எம்.பி. சு.வெங்கடசேன் மட்டுமே அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி இன்று எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 221 ஏக்கரில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர்கள் கல்லூரி, பணியாளர்கள் குடியிருப்பு, மாணவ மாணவியருக்கான விடுதிகள் அமைக்கப்படுவதற்கு எய்ம்ஸ் நிர்வாகம் இந்த அனுமதியை கோரியுள்ளது. மக்களவைத் தேர்தல் தற்பாது தீவிரமெடுக்கும்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடைய மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மத்திய பாஜக அரசு தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துமனை கட்டுமானப் பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதற்கட்டமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கும் மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவக் கல்லூரி மாணவர்களை, மதுரை தோப்பூர் அல்லது திருமங்கலம் பகுதியில் உள்ள வாடகை கட்டிடங்களுக்கு மாற்றுவதற்கு எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் மதுரையில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடுத்தக்கட்டமாக டெண்டர் விடப்பட்டுள்ள எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி இப்பணிகளை விரைவுப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காகவே கட்டுமானப் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தற்போது எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது தெரிய வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x