

சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒருபகுதியான கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் உயர்மட்டப்பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் அமைக்க வேண்டிய 811 தூண்களில் தற்போதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப் பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகியவை பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த பகுதியில் தற்போதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் - பூந்தமல்லி வரையான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, சாலிகிராமம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் உயர்மட்டப்பாதையில் 18 நிலையங்களில் 13 நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மெட்ரோநிலையங்களுக்கான நுழைவாயில், வெளியேறும் பகுதி அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குக்குள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது.
இந்த குறிப்பிட்ட பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக, வரும்2025-ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப்பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பனகல் பூங்காவில் சுரங்கப்பாதை பணி: 4-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான "பிளமிக்கோ" கடந்த ஆண்டு செப்.1-ம் தேதி பணியைத் தொடங்கியது. இதையடுத்து, 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான "கழுகு" தனது பணியை கடந்த 18-ம் தேதி தொடங்கியது.
இது, கலங்கரை விளக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியைத் தொடங்கி, கச்சேரி சாலை, திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையம் வழியாக போட்கிளப்பை வரும் 2026 அக்டோபரில் அடைய உள்ளது.
இதற்கிடையில், பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி "பிகாக்" என்ற இயந்திரம் மூலமாக, சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது, இந்த இயந்திர பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பூமிக்கடியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.