

சென்னை: கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிபொறுப்பேற்றதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு ப்ளீடராக பி.முத்துக்குமார் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் பதவி உயர்வில் தற்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக் கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே சிறப்பு அரசு ப்ளீடராக பதவி வகித்த ஏ.எட்வின் பிரபாகர் பதவி உயர்வில் மாநிலஅரசு ப்ளீடராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
கூடுதல் தலைமை வழக்கறிஞ ராக நியமிக்கப்பட்டுள்ள பி.முத்துக்குமார், இதற்கு முன்பாக மாநில அரசு ப்ளீடராக பணியாற்றியபோது மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய பாடலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி திருத்தங்கள் செய்து அதை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழகஅரசுக்காக ஆஜராகி அதை தள்ளுபடி செய்ய வைத்தது, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழக அரசுவிதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு என பல வழக்குகளிலும், திறமையாக வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.