

சென்னை: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்தை மத்திய அரசு முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்க்ஷ்யா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்துள்ளது.
இந்த பெயர் மாற்றம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி இந்த புதிய சட்டங்கள் இந்தாண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில்உள்ள சில பிரிவுகளைத் தவிர்த்துவேறு எந்த மாற்றமும் செய்யப்படாமல் அவற்றின் பெயர்கள் மட்டுமே இந்தியில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், குற்றவியல் சட்டத்தின் காலவரம்பு குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள சட்டங்களின்பெயரை அரசு வழக்கறிஞரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை.
அப்போது நீதிபதி, குற்றவியல் சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்திருந்தாலும் எனக்கும் இந்தி தெரியாது என்பதால்ஐபிசி, சிஆர்பிசி என பழைய பெயர்களிலேயே தொடர்ந்து குறிப்பிடுவேன் என கருத்து தெரிவித்துள்ளார்.