Published : 24 Jan 2024 04:30 PM
Last Updated : 24 Jan 2024 04:30 PM

சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

சி.வி.சண்முகம் | கோப்புப்படம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இரண்டு வழக்குகளை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது.

12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்களின்போது தமிழக அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்துக்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை தமிழக அரசு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த ஜன.18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "முதல்வரை தாக்கி, நேரடியாக பேசவில்லை. தமிழக அரசை மட்டுமே விமர்சித்தேன். தங்கள் போராட்டத்துக்குப் பிறகு 12 மணி நேர வேலை அறிவிப்பை அரசு திரும்பப் பெற்றது. அப்படியிருக்க தங்களது கருத்து எப்படி அவதூறாக கருத முடியும்? . அவதூறு வழக்கு தொடர்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விசயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்" என்று குற்றம்சாட்டி வாதிட்டிருந்தார்.

அப்போது நீதிபதி, அரசை விமர்சித்த அதேவேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது என சி.வி.சண்முகம் தரப்புக்கு கேள்வி எழுப்பிருந்தார். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “அரசையும் முதல்வரையும் விமர்சிக்கும் வகையில் சி.வி.சண்முகம் பேசிவிட்டு, நேரடி தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது அவதூறு கருத்து இல்லை என கூறுவதை எப்படி ஏற்க முடியும்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மத்திய அரசை கண்டு தமிழக அரசு பயப்படுவதாகவும், கஞ்சா முதல்வர் என விமர்சித்ததற்காக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், தொழிலாளர் சட்டம் குறித்தும், 420 அரசு என பேசியதற்காக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x