

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு பேருந்து சேவை நேற்று தொடங்கப்பட்டது.
மேல்சோழங்குப்பத்தில் இருந்து காந்தபாளையம், ஆதமங்கலம் புதூர், கலசப்பாக்கம், போளூர் வழியாக புதிய வழித்தடத்தில் சென்னை அடுத்த கிளாம்பாக்கம் வரை செல்லும் பேருந்து சேவையை சட்டப்பேரவை உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “மேல்சோழங்குப்பம் - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் பேருந்து மூலம் கிராம மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், போளூரில் இருந்து நாயுடுமங்கலம், நார்த்தாம் பூண்டி, பெரிய கிளாம்பாடி, காஞ்சி வழியாக செங்கம் வரை டவுன் பேருந்து சேவையை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும்” என்றார்.
பின்னர் எம்எல்ஏ, புதிய பேருந்தில் ஆதமங்கலம் புதூர் வரை பயணித்தார். அப்போது பேருந்தில் பயணித்த பயணிகளுக்கான டிக்கெட் கட்டணத்தை அவரே செலுத்தினார். இதில், ஒன்றிய குழுத் தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், தொமுச மண்டல செயலாளர் சவுந்தர ராஜன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பிரபாகரன், துணை மேலாளர் ( வணிகம் ) கலைச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.