Published : 22 Jan 2024 06:13 AM
Last Updated : 22 Jan 2024 06:13 AM

மநீம கட்சி அவசர செயற்குழு இன்றும், நாளையும் நடக்கிறது: கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு

சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. ஒரு சில மண்டலத்துக்கு மட்டுமே மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கும் பணி நிலுவையில் இருக்கிறது. இவ்வாறு கள அளவில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களவைத் தேர்தலும் நெருங்கி வருகிறது. இதையொட்டியே தற்போது அவசர செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமையகத்தில் இன்று (ஜன.22) மாலை 4 மணிக்கு புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டமும், நாளை (ஜன.23) காலை 11.30 மணிக்கு தமிழக நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறவுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கூட்டணி குறித்த முடிவு எடுப்பதற்கான அதிகாரம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. தற்போது அவசர செயற்குழு கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டதால் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடு தொடர்பான அறிவிப்புகள் வெளியிட தலைமை திட்டமிட்டிருக்கிறது. அதில் குறிப்பாக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கிறோம். மக்களவைத் தேர்தலையொட்டிய முக்கிய கலந்தாய்வு கூட்டமாக இந்த 2 நாள் செயற்குழு கூட்டம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x