

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் திமுக அறிக்கை தயாரிப்பு குழு, மக்களவைத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழு என 3 குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது. இதில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் உதயநிதி ஸ்டாலினும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக அறிக்கையின் விவரம் வருமாறு: மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு குழு மக்களவை எம்.பி. கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணிச் செயலாளர் ஏகேஎஸ் விஜயன், சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தொழில்நுட்ப அணிச் செயலர் டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், எம்.பி. ராஜேஸ்குமார், மாணவரணிச் செயலாளரும், எம்எல்ஏவுமான சிவிஎம்பி.எழிலரசன், மேயர் பிரியா ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
மக்களவை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, (முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (துணைப் பொதுச் செயலாளர்), க.பொன்முடி, (துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா (துணை பொதுச் செயலாளர்), திருச்சி சிவா (கொள்கை பரப்புச் செயலாளர்) எம்ஆர்கே.பன்னீர்செல்வம் (உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது. அப்போது தமிழகத்தில் 39 தொகுதிகளில் 38-ல் திமுக அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன. இந்நிலையில் இந்த மக்களவைத் தேர்தலிலும் வலுவான கூட்டணியோடு அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற திமுக வியூகம் வகுத்து வருகிறது. அதன் முதல் அடியாக தேர்தல் அறிக்கை, தேர்தல் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்து கட்சி உத்தரவிட்டுள்ளது. குழுக்களில் இளையோரான உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.