கோடநாடு விவகாரத்தில் மானநஷ்ட ஈடு கோரிய வழக்கு: பழனிசாமி சாட்சியம் வீட்டுக்கே சென்று பதிவு செய்யப்பட்டது

கோடநாடு விவகாரத்தில் மானநஷ்ட ஈடு கோரிய வழக்கு: பழனிசாமி சாட்சியம் வீட்டுக்கே சென்று பதிவு செய்யப்பட்டது
Updated on
1 min read

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் விபத்தில் பலியானார். இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை தொடர்புபடுத்தி கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டியளித்திருந்தார்.

அதையடுத்து தன்னைப் பற்றி பேச தனபாலுக்கு தடைவிதிக்கக் கோரியும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கக் கோரியும் தனபாலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பழனிசாமியின் சாட்சியத்தைப் பதிவு செய்ய மாஸ்டர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, மாஸ்டர் நீதிமன்றத்துக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், தனது சாட்சியத்தை தனது வீட்டில் வைத்து பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென்றும் பழனிசாமி மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிசாமியின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்ற எஸ்.கார்த்திகை பாலன், இந்த வழக்கு தொடர்பாக பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்தார். இதுதொடர்பாக விரைவில் அவர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

இதே விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலிடமும் மான நஷ்டஈடு கோரி, உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கிலும் வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அதை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in