ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி 3வது முறையாக மனு - அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி 3வது முறையாக மனு - அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில் கீழமை நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் கோரி 3வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், "இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, அமலாக்கத் துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in