Published : 26 Dec 2023 02:35 PM
Last Updated : 26 Dec 2023 02:35 PM

“எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணிக்கே வெற்றி; திமுகவுக்கு இறங்குமுகம்” - இபிஎஸ் @ பொதுக்குழு கூட்டம்

சென்னை: "அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுகவுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன் திமுக அமைச்சர்கள் பலர் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள்" என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிச.26) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆன பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் வரவேற்பு பேனர்கள் முதல் கூட்ட அரங்கு வரை எல்லாவற்றிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார் எடப்பாடி பழனிசாமி. அவர் பேசுகையில், "அதிமுக மாநாடு ஆகஸ்ட் மாதம் மதுரையே குலுங்கும் அளவுக்கு நடந்து முடிந்தது. எதிரிகள் அஞ்சுகின்ற அளவுக்கு நடந்த மதுரை மாநாட்டை பற்றி, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசியிருக்கிறார். உதயநிதி சொன்னதில் இருந்து திமுகவின் சேலம் மாநாடு மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அதிமுகவை விமர்சிக்கும்போதே உங்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அரசியல் கத்துக்குட்டியாக இருந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை.

அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி. எந்த கொம்பனாலும் அதிமுகவை ஒழிக்கவோ, முடக்கவோ, ஒடுக்கவோ முடியாது. சோதனை மேல் சோதனைகளை சந்தித்த கட்சி. எத்தனை வழக்குகள், எத்தனை சிக்கல்கள். அதிமுகவை முடக்க எதிரிகளோடு கைகோர்த்து துரோகிகளும் இணைந்து கொண்டார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அத்தனையும் வென்று காட்டினோம். ஒவ்வொரு முறையும் பொதுக்குழு நடைபெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பதற்றத்தோடு பொதுக்குழுவில் நாம் சந்திப்போம். ஆனால் இந்த பொதுக்குழுவில் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது. நீதிமன்றத்திலும் நீதி வென்றுவிட்டது. தேர்தல் ஆணையத்திலும் நமக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும்.

தமிழகத்திலேயே அதிக தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. அதிமுக அரசின் நடவடிக்கைகளால் தான் தமிழகம் இன்றைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. கரோனா காலத்தில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றியது. ஆனால், சரியான முறையில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் திணறிய அரசு திமுக அரசு. திமுக ஆட்சியில் பல உயிர்களை இழந்தோம்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது 520 அறிவிப்புகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். ஆனால் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. செயலாற்றாத அரசாக திமுக அரசு உள்ளது. பொம்மை முதலமைச்சர் இன்றைக்கு தமிழகத்தை ஆளுகிறார். அதனால் மக்கள் படுகின்ற துன்பம் ஏராளம். இந்த ஆட்சியின் சாதனை என்றால் ஊழல் செய்வதில் சாதனை படைத்துள்ளதை தவிர வேறு எதுவும் கிடையாது. அண்மையில் ஒரு அமைச்சருக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்துள்ளது. இன்னும் பல அமைச்சர்கள் தண்டனை கிடைக்க காத்திருக்கிறார்கள். சட்டமன்றத்தில் முன்னணி வரிசையில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் பலரும் மக்களை பார்க்காமல், நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குள் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைச்சர்கள் இருப்பார்கள்.

முதல்வர் ஸ்டாலினே அவருடைய கட்சியை பற்றி புலம்பிக்கொள்கிறார். இவர் எங்கு நாட்டுக்கு நல்லது செய்ய போகிறார். ஸ்டாலினுக்கு கட்சியையும் நடத்த தெரியவில்லை, ஆட்சியையும் நடத்த தெரியவில்லை. அதனால் தான் பொம்மை முதல்வர் என்கிறோம். திமுக அரசுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைக்கு உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நிலை.

தமிழகத்தில் விவசாயிகள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளார்கள். பேரிடரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை. விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது. செய்யாறு சிப்காட்டுக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தப்பட பார்க்கிறது. போராடியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார்கள். இதற்கெல்லாம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகள் பதிலடி கொடுப்பார்கள்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏகப்பட்ட இயற்கை சீற்றங்கள் வந்தன. ஆனால், புயல் பாதிப்பை புயல் வேகத்தில் செயல்பட்டு பாதிப்பின் அடிசுவடே தெரியாத அளவுக்கு அதிமுக பணி செய்தது. மிக்ஜாம் புயலின்போது திமுக அரசு திட்டமிட்ட செயல்படாத காரணத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் சென்னை தண்ணீரில் தத்தளித்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா உணவகத்தை மூடியது இந்த அரசு. இதனால், மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான உணவு கொடுக்க முடியவில்லை.

தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என முன்கூட்டியே அறிவித்தும், இந்த அரசாங்கம் தூங்கிக்கொண்டிருந்த காரணத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். எட்டு நாட்கள் ஆகியும் தென் மாவட்டங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார். வாக்களித்த மக்களை பார்க்க முதல்வருக்கு நேரமில்லை. வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு கொடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்காததால் மக்கள் உயிரிழந்துள்ளனர். 2015 வெள்ளப் பாதிப்பு குறித்து தவறான தகவலை ஸ்டாலின் அளிக்கிறார். செம்பரம்பாக்கம் ஏரியில் ஒருலட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது என பொய் சொல்கிறார். செம்பரம்பாக்கம் ஏரியில் 35,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும்.

எப்போது பார்த்தாலும் நிதியில்லை எனக் கூறுகிறது திமுக அரசு. நிதி ஆதாரத்தை பெருக்க இந்த அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பணி ரூ.2,35,000 கோடி கடன் வாங்கியது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது. மத்திய அரசு உதவியை எதிர்பார்க்க கூடாது. மத்திய அரசை குறை சொல்லி மாநில அரசு தப்பிக்க பார்க்கிறது. அதேபோல் மத்திய அரசும் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து தேவையான நிதி ஒதுக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சி செய்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் தமிழகத்தை பார்க்கிறார்கள். மாநில அரசு கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுத்த வரலாறு கிடையாது. மத்திய அரசு மனிதாபிமானத்தோடு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும். மக்கள் பாதிக்கப்படும்போது உதவி செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் கடமை" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x