“தமிழகம் மீண்டெழ மத்திய அரசு உதவும் என பிரதமர் உறுதி” - முதல்வர் ஸ்டாலின்

“தமிழகம் மீண்டெழ மத்திய அரசு உதவும் என பிரதமர் உறுதி” - முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பு என அடுத்தடுத்த இரண்டு இயற்கை பேரிடரில் இருந்து தமிழகம் மீண்டெழ மத்திய அரசு உதவும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

“மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட உடன் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் குறித்துக் கேட்டறிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்னை அழைத்திருந்தார். கடும் நிதி நெருக்கடிக்கிடையே மாநில அரசு மேற்கொண்டு வரும் பெரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவரிடம் விளக்கிக் கூறி, மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியைக் கோரினேன்.

இந்த இரட்டைப் பேரிடரில் இருந்து தமிழகம் மீண்டெழ மத்திய அரசு உதவும் என உறுதியளித்த பிரதமர் அவர்கள், வெள்ளப் பாதிப்பை மதிப்பிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்” என முதல்வர் ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து, விளக்கி இருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதோடு நிவாரண பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் கோரி இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in