

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள புத்தகக் காட்சியில் பட்டியலின மற்றும் பழங்குடியின பதிப்பாளர்களும் இடம் பெறுவதை உறுதி செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் பபாசி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அம்பேத்கர் குறித்த புத்தகங்களை வெளியிடும் ‘வாய்ஸ் ஆஃப் புத்தா’ பதிப்பகத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் ‘எழுச்சி’ பதிப்பகத்தைச் சேர்ந்த பதிப்பாளர் பிரதீப் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக புத்தகக் காட்சி நடத்தப்படும் நிலையில், சென்னையில் மட்டும் பபாசி ( தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ) என்ற தனியார் அமைப்பே புத்தகக் காட்சியை நடத்தி வருகிறது. மற்ற மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் இந்த புத்தகக் காட்சியை நடத்த ரூ.8.45 கோடியை ஒதுக்கியுள்ளது. சென்னையில் புத்தகக் காட்சியை நடத்த ரூ.75 லட்சத்தை நிதியுதவியாக பபாசிக்கு வழங்குகிறது.
இந்த புத்தகக் காட்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் என்ற அடிப்படையில் பட்டியலின மற்றும் பழங்குடியினரால் நடத்தப்படும் பதிப்பகங்களுக்கு போதுமான அரங்குகள் ஒதுக்கப்படுவதில்லை. பபாசியில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டும் 50 சதவீத சலுகை கட்டணத்தில் அரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு அரங்குகள் ஒதுக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் அரங்குகள் அனைவருக்கும் ஒதுக்கிய பிறகு வேண்டா விருப்பாக எங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. எனவே, சென்னையில் நடைபெறவுள்ள புத்தகக் காட்சியில் பட்டியலின மற்றும் பழங்குடியின பதிப்பாளர்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இந்த புத்தகக் காட்சியில் எங்களது இரு பதிப்பகங்களுக்கும் அரங்குகள் ஒதுக்கி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
அதேபோல், எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் பரிந்துரைப்படி புத்தகக் காட்சிக்கான ஒருங்கிணைப்பு குழுவிலும் பட்டியல் மற்றும் பழங்குடியின பதிப்பாளர்கள் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வழக்கில் பபாசியையும் எதிர் மனுதாரராகச் சேர்த்து, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் பபாசி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.2-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.