Published : 22 Dec 2023 07:05 PM
Last Updated : 22 Dec 2023 07:05 PM

“தமிழக மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்” - தங்கம் தென்னரசு @ வெள்ள நிவாரண நிதி விவகாரம்

தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு (இடது) , மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (வலது)

சென்னை: “2015-ம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய மொத்தத் தொகை என்பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில் மத்திய பாஜக அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்களுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் 4-ஆம் தேதியன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பெய்த மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை அனைவரும் அறிவீர்கள். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தான் பேராபத்து தவிர்க்கப்பட்டது. புயல் - மழைக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் காரணமாக ஒவ்வொரு பகுதியும் படிப்படியாக மீண்டு வருகிறது. நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கி வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் மக்களைக் காக்கும், மீட்கும் பணி தொடர்ந்து கொண்டு வருகிறது.

இதுகுறித்து நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை. வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் மட்டுமல்ல, ஊடகங்களின் வாயிலாக கடந்த மூன்று வார காலமாக நாட்டு மக்கள் இந்தச் செய்திகளைத்தான் அதிகம் அறிந்து வருகிறார்கள். ஊடகங்களும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் செய்திகளுக்குத்தான் அதிக முக்கியத்தும் அளித்து காட்சிகளை வெளியிட்டு வருகிறார்கள். நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த இந்த பாதிப்புச் செய்தி, இந்தியாவில் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை. அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன். ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்துள்ள பதில் தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவது ஆகும்.

மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கடந்த 19-ம் தேதி அன்று விளக்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 20 நிமிடங்கள் முதல்வர் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர் , 'இது தொடர்பான கோரிக்கை மனு கொண்டு வந்துள்ளீர்களா?' என்று கேட்டார். ஆம் என்றதும் அதனை வாங்கி வைத்துக் கொண்டார். 'உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன். இதை விட எனக்கு வேறு பணி இல்லை' என்று பிரதமர் சொன்னார்.

தமிழகத்தில் டிசம்பர் 4, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் பெய்த மழை என்பது வரலாறு காணாதது. 50 ஆண்டுகள் கழித்து பெய்கிறது, 100 ஆண்டுகள் கழித்து பெய்கிறது என்று சொல்லத் தக்க மழையளவு ஆகும். எனவேதான் அது ஏற்படுத்திய பாதிப்பு என்பது மிகமிக அதிகமானது. இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்தார்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத்தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத்தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதல்வர் கோரி உள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்டபாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி தரவேண்டும் என்றும் முதல்வர் பிரதமரிடம் கோரியுள்ளார். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழக அரசால் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதாவது மத்திய அரசிடம் தமிழக அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக (Calamity of severe nature) அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடியை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார். திமுக அரசையும், முதல்வரையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழக மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பாதிப்பையும், பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்கள் அடைந்த துயரங்களையும், அனுபவிக்க இருக்கும் துன்பங்களையும் கவனத்தில் கொள்ளாமல் ' தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது, அப்படி இதுவரை அறிவித்தது இல்லை' என்று சொல்வதன் மூலமாக தனது இரக்கமற்ற குணத்தைத் தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி இருக்கிறார். மக்கள் துன்ப துயரங்களை அடைந்து வரும் நேரத்தில் அவர்களைக் கேலி செய்வதைப் போல இருக்கிறது அவர் அளித்திருக்கும் பேட்டி.

மத்திய அரசின் அமைப்புகளின் சார்பில் என்னனென்ன மீட்புப்பணிகள் நடந்துள்ளது என்பதை எல்லாம் நிதி அமைச்சர் தனது பேட்டியில் சொல்லி இருக்கிறார். இது எதுவும் புதிய செய்தி அல்ல. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் நெல்லையில் வைத்து அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னவை தான். மத்திய பாதுகாப்புப் படையும் ராணுவமும் எந்த வகையில் ஒத்துழைத்து மீட்புப் பணியைச் செய்துள்ளது என்பதை முதல்வர் அவர்களே விளக்கிச் சொல்லி விட்டார். மத்திய பாதுகாப்புப் படை ஒத்துழைக்கவில்லை என்றோ, ராணுவம் வரவில்லை என்றோ நாங்கள் குற்றச்சாட்டை வைக்கவுமில்லை. நிதி அமைச்சர் சொன்னது புதிய செய்தியும் அல்ல. தமிழக அரசின் செய்திக்குறிப்புகளை வரிசையாகப் பார்த்தாலே மத்திய பாதுகாப்புப் படை குறித்த செய்திகள் அதிகம் உள்ளன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளிக்க இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், தமிழகத்துக்கான நிதியை அறிவிக்கவே அவர் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக நான் முதலில் நினைத்தேன். 'நிதி கிடையாது' என்று சொல்வதற்காக எதற்காக பேட்டி தர வேண்டும்?பொய்யும் வன்மமும் கலந்த குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலமாக தமிழக அரசின் மீது தவறான கற்பிதத்தை உருவாக்க மீடியாக்களை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தி இருக்கிறார்.தமிழக அரசு கேட்டது 21 ஆயிரம் கோடி. ஆனால் அதில் இதுவரை வந்திருப்பது 450 கோடி மட்டுமே. இதுவும் தமிழக அரசுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய நிதி தானே தவிர, இப்போது ஏற்பட்ட புயல் - மழை - வெள்ளச் சேதங்களில் இருந்து மீட்க தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல.

இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்துக்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்துக்கு ஒருமுறை மத்திய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு (Finance Commission) தீர்மானிக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை மத்திய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 300 கோடி ரூபாயை தமிழக அரசு ஏற்றிடவேண்டும்.

மத்திய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப்படும். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் NDRF-இல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.மத்திய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. தமிழக மக்களை மத்திய பாஜக அரசு எத்தகைய அலட்சியத்தோடு நடத்துகிறது என்பதற்கு உண்மையான எடுத்துக்காட்டு இது.

2015-ம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிய மொத்தத் தொகை என்பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில் மத்திய பாஜக அரசால் ரூ.5884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே ஆகும். அதாவது பாஜக தமிழகத்தில் வைத்திருக்கும் வாக்கு சதவிகிதத்துக்கு அதற்கு ஏற்ப நிதி ஒதுக்குவார்கள் போலும். தமிழகம் குறித்தும், வாழும் மக்கள் குறித்தும் துளியும் அக்கறையற்றதாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதனை மறைப்பதற்காக நிருபர்கள் மீது பாய்ந்துள்ளார் நிதி அமைச்சர். அவரது கோபத்துக்குப் பின்னால் இருக்கும் குதர்க்கம் அனைவரும் அறிந்ததுதான்.

நிதி அமைச்சர் தனது பேட்டியில், பிரதமர் - முதல்வரது சந்திப்பையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். 'ஒரு நாள் முழுக்க டெல்லியில் இருந்த முதல்வர், போகிற போக்கில் சந்தித்துக் கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார்' என்று சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். பிரதமர் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கான நேரத்தை அவர் தான் தீர்மானிப்பார் என்பதைக் கூட தெரியாதவராக ஒருவர் நிதி அமைச்சராக இருப்பது வேதனை தருகிறது. மதியம் 12.30 மணிக்கு வரலாம் என்று நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு வரலாம் என்று நேரத்தை மாற்றியது பிரதமர் அலுவலகம். எனவே இரவில் சந்திக்க நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம் தானே தவிர, முதல்வர் அல்ல. தமிழக முதல்வர் யாரிடமும், எந்த சூழலிலும் தோரணை காட்டக் கூடியவர் அல்ல.

'மழை பெய்யும் போது முதல்வர் எங்கே இருந்தார்?' என்று கேட்கிறார் நிர்மலா சீதாராமன். 'இண்டியா' கூட்டணி கூட்டத்துக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். 'இண்டியா' என்றாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனைத் தான் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி இருக்கிறார். பிரதமரைச் சந்திப்பதற்காகவும் சேர்த்தே தான் முதல்வரின் டெல்லி பயணம் திட்டமிடப்பட்டது. பற்றி எரிந்த மணிப்பூருக்கு மத்திய மாண்புமிகுக்கள் ஒரு தடவையாவது போனார்களா? மயிலாப்பூருக்கு வந்து காய்கறி வாங்கி போட்டோ எடுத்துக் கொண்ட நிதி அமைச்சர், 4-ஆம் தேதி புயல் - வெள்ளப் பாதிப்புகளைப் பார்க்கவாவது ஒரு முறை சென்னை வந்தாரா? என்று எங்களாலும் கேட்க முடியும். டெல்லி சென்ற ஒரே ஒரு நாள் தவிர - அனைத்து நாட்களும் மக்களோடு மக்களாகத்தான் இருந்தார் முதல்வர். இதை தமிழக மக்கள் அனைவரும் அறிவார்.

'ஒரே நாடு - ஒரே தேசம்' என்பதில் உண்மையான அக்கறை இருப்பவராக இருந்தால் தமிழகத்தில் நடந்த பாதிப்புகளை கடும் பேரிடராக அறிவியுங்கள், தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை விடுவியுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் கூறியது என்ன? - தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியது: “தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 18-ம் தேதி அதி கனமழை பெய்த நிலையில், அன்று மதியமே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் நேரில் சந்தித்து கூடுதல் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். அதை ஏற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து விதமான உதவிகளையும் வழங்க உடனடியாக உத்தரவிட்டார்.

மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் மற்றும் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். 21ம் தேதி வரை தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கியிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

விமானப்படை மூலமாக 5 ஹெலிகாப்டர்களும், கடற்படை மூலமாக 3 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படை மூலம் ஒரு ஹெலிகாப்டரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவை 70 இடங்களில் மீட்புப்பணியில் ஈடுபட்டன. தேசிய மீட்புப் படை, ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோரக் காவல்படை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

வெள்ள பாதிப்புகளை மதிப்பிட மத்திய அரசின், அமைச்சகங்களுக்கு இடையிலான குழு உடனடியாக அந்த மாவட்டங்களுக்குச் சென்றது. இதே போல், இந்த மாதத்தில் மிக்ஜாம் புயலின்போது சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்திய அரசின் குழு உடனடியாக சென்னை சென்றது. ஒவ்வொரு ஆண்டும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு தமது பங்கை வழங்குவது வழக்கம். தமிழ்நாட்டிற்கு இந்த நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பங்கு 900 கோடி ரூபாய், இரண்டு தவணைகளாக ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு விட்டது.

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது. இந்த மையம் தென் மாவட்டங்களில் அதி கனமழை தொடர்பாக டிசம்பர் 12-ம் தேதியே முன்னெச்சரிக்கைத் தகவல்களை வழங்கி இருக்கிறது. வானிலை ஆய்வு மையம் உரிய நேரத்தில் தகவல்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை.

தென்மாவட்ட மழை வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை. எந்த மாநிலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கும் நடைமுறை வழக்கத்தில் இல்லை. உரிய வழிகாட்டு நெறிமுறைகள் படி மாநில அரசுகள் வேண்டுமானால், இதுபோன்ற பாதிப்புகளை மாநில அளவில் பேரிடராக அறிவித்து உரிய முறையில் நிதி ஒதுக்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

சென்னையை பொறுத்தவரை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு வழங்கும் நிவாரண உதவித் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தினால் அவை பயனாளிகளை முழுமையாகச் சென்றடையும். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழ்நாட்டின் நலன்களில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். இது தொடரும். அரசின் பணிகள் தொடரும்” என்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x