இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை: படகு உரிமையாளர் ஜன.24-ல் ஆஜராக உத்தரவு
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக விசைப்படகு மீனவர்கள் 8 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து டிச.6-ம் தேதி கடலுக்குச் சென்ற உயிர்தராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி கைப்பற்றினர்.
படகிலிருந்த ஜெயஸ்தன் (36), தால்ஷா (50), சார்லஸ் (54), லாசர் கெபிஸ்டன் (30), தினேஷ் (38), முனியசாமி (58), அருள் பிரிட்சன் (28), ஜான் சைமன் (31) ஆகிய 8 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஜீத், இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையில் 8 மீனவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
மேலும், ஜன. 24 அன்று படகின்உரிமையாளர் உயிர்தராஜ் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும்தெரிவித்து நீதிபதி வழக்கை தள்ளிவைத்தார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகஅதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
