டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடுவதில் தாமதம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடுவதில் தாமதம்
Updated on
1 min read

சென்னை: டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அர: சின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்? தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத் தேர்வு எப்போது நடத்தப்படும்? தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டும்தோறும் வெளியிட்டு வருகிறது.

இவ்வாறு கால அட்டவணை வெளியிடுவது, அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை டிச.15-ல் வெளியாகும் என தகவல் வெளியானது. இதனால், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், டிச.15-ல் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

டிசம்பர் முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியிடப்படாததாலும் அதுதொடர்பான அறிவிப்பு ஏதும் இல்லாததாலும் தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) ஆகியவை 2024-க்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in