Published : 14 Dec 2023 04:16 PM
Last Updated : 14 Dec 2023 04:16 PM

“இந்தி... தேசிய மொழியல்ல!” - கோவா விமான நிலைய சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் மு.க.ஸ்டலாின் | கோப்புப்படம்

சென்னை: “பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?” என்று கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிகழ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும” என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்துக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர். ‘நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது’ என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர், ‘தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும்’ என்று தமிழ் பெண் பொறியாளரை அவமதித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்துக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x