தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன? - சிபிஐ விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன? - சிபிஐ விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா, இல்லை கைவிடப்பட்டதா என்பது குறித்து சிபிஐ விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர்ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்ததாக கூறப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரரான ஹென்றி திபேன், ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுத்துள்ளது.அவர்களுக்கு எதிராக எந்த குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என்பதால் மீண்டும் சிபிஐ விசாரிக்க அனுமதிக்கக்கூடாது. எனவே தமிழக அரசே சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலர் இறந்துள்ள நிலையில் ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டு, மற்ற காவல் துறையினருக்கு எப்படி நற்சான்று வழங்க முடிந்தது என சிபிஐ தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிபிஐ தரப்பில், அந்த குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளதால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மீண்டும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் 10 ஆண்டுகளாகும் என கருத்து தெரிவித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது கைவிடப்பட்டதா என விளக்கமளிக்க சிபிஐ தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையின் நகலை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு விசாரணையை வரும் டிச.19-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in