Published : 06 Dec 2023 04:28 PM
Last Updated : 06 Dec 2023 04:28 PM

சென்னை வெள்ளம்: அடையாறு கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை நீடிப்பு

அடையாறு ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் | படம்: எம்.கருணாகரன்

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பகல் 12 மணி நிலவரப்படி போக்குவரத்து நிலை, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவலை சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: நிலைமை இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டதால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதான சாலைகள் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் : புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.திருமங்கலம் 100 அடிசாலை மழைநீர் தேக்கம் காரணமாக எஸ்டேட் சாலை – பார்ச் சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது.100 அடி சாலை விநாயகபுரம் முதல் கோயம்பேடு வரை மழைநீர் தேக்கம் காரணமாக MMDA,ரசாக் கார்டன், NSK நகர் வழியாக திருப்பிவிடப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் நீர்தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்படுகின்றன. சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின்(DDRTs) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்:

  • 04.12.2023 அன்று காலை, கிண்டி, 5 பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG நிலையத்தின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, அருகில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் பள்ளத்தில் விழுந்தது. மேற்படி நிலையத்தின் மூன்று ஊழியர்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள், M.G.சாலை அடையாரில் அமைந்துள்ள மழைநீர் தேங்கிய அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர்.
  • N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட BRN கார்டன் பகுதியிலிருந்து 54 குடும்பங்கள் மீட்கப்பட்டனர்.
  • R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராமம் தசரதபுரம் 4வது தெருவில், புதிதாக பிரசவித்த தாய் மற்றும் குழந்தை மீட்கப்பட்டனர்.
  • கோயம்பேடு பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை மீட்கப்பட்டனர்.
  • E-1 மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் உள்ள கணேசபுரம், ஸ்லேட்டர்புரம் & சண்முகா தெருவில் 225 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு நகரில் 15 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • 6 நபர்கள் (2 முதியவர்கள், 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள்) மேற்கு மாம்பலம் ஶ்ரீனிவாச ஐயர் தெருவில் உள்ள மழைநீர் தேங்கிய அவர்களது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
  • S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த ராம் நகரிலிருந்து ஒரு பெண் உட்பட 8 நபர்கள் மீட்கப்பட்டு மயிலை பாலாஜி நகர் நிவாரண மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த அண்ணா நகரிலிருந்து 4 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • மெரினா கால்வாய் தெருவிலிருந்து 8 நபர்கள் மீட்கப்பட்டு, V.R.பிள்ளை தெருவில் உள்ள (D-6 அண்ணா சதுக்கம் கா.நி) சமுதாய நலக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னை சத்யா நகரிலிருந்து 250 நபர்கள் மீட்கப்பட்டு, செயின்ட் சேவியர் பள்ளிக்கூட நிவராண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • ஈச்சங்காடு சந்திப்பில் கனமழையில் சிக்கிக்கொண்ட மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 22 பயணிகள் மீட்கப்பட்டு, கீழ்க்கட்டளையில் உள்ள பல்லாவரம் நடுநிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.
  • J-8 நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்தேல் நகரிலிருந்து 60 நபர்கள் மீட்கப்பட்டு, VGP பிலோமினா பள்ளி, அரசு புயல் கட்டிடம் மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  • J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்குப்பத்திலிருந்து 50 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • H-6 ஆர்.கே.நகர் காவல் எல்லைக்குட்பட்ட நேரு நகரிலிருந்து 30 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • திருவல்லிக்கேணி காவல் எல்லைக்குட்பட்ட OVM தெருவில் உள்ள சிதிலமடைந்த வீடுகளிலிருந்து இரண்டு குடும்பத்தினர் மீட்கப்பட்டனர்.
  • R-10 MGR நகர் காவல் எல்லைக்குட்பட்ட பாரதிதாசன் காலனி மற்றும் வாசுதேவன் நகர் பகுதிகளிலிருந்து 30 நபர்கள் மீட்கப்பட்டனர்.
  • J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஶ்ரீநகர் காலனி, சத்யா நகர் மற்றும் ரங்கராஜபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து 150 நபர்கள் ராணுவத்தின் உதவியோடு மீட்கப்பட்டு, செயின்ட் சேவியர் பள்ளிக்கூட நிவராண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், டான்சி நகர், AGS காலனி, கிரிஜா நகர், மணப்பாக்கம், பெத்தேல் நகர், BRN கார்டன், ஸ்டான்லி நகர், பென்சில் பேக்டரி, ஸ்லேட்டர்புரம், கணேசபுரம், MGR நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள்:கணேசபுரம் சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப் பாதை (ஒருவழி பாதை), CP சாலை சுரங்கப்பாதை,வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை, கோயம்பேடு புதிய சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விழுந்த 465 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இறப்புகள் : 6 - இறந்தவர்களின் விவரம்:

  • பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தாமோதரன் (ஆ/40) என்பவர் தனது வீட்டில் தேங்கியிருந்த மழை நீரில் இறந்து காணப்பட்டார்.
  • 05.12.2023 அன்று 7 மணிக்கு, உடல்நலமின்றி படுக்கையிலிருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த பெருமாள் (64 வயது) என்பவர், அவரது வீட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
  • 05.12.2023 அன்று முற்பகல், G5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் எல்லைக்குட்பட்ட அஸ்பிரின் கார்டன் அருகே தேங்கிய மழைநீரில் K-7 ICF காவல் நிலைய தலைமைக் காவலர் 24784 ருக்மாங்கதன் (48 வயது - 2002 பேட்ச்) என்பவர் இறந்துகிடந்தார். போலீஸார் சம்பவிடத்துக்குச் சென்று, அவரது உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • 05.12.2023 அன்று முற்பகல், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது பிரேதம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
  • மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு (85 வயது – ஓய்வு பெற்ற காவல் போக்குவரத்து ஆய்வாளர்) என்பவர் அவரது வீட்டில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
  • மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

நீரில் மூழ்குதல் / மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விபரம்: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, காரனேஷன் நகரில், மரம் விழுந்து காயமடைந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ரமேஷ், வ/43, த/பெ.பெருமாள் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

  • திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முருகன் (37 வயது) என்பவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
  • B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த 72 வயது பெண்மணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • பிரசவ வலியிலிருந்த கொளத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மீட்கப்பட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • § நான்கு கர்ப்பிணிப் பெண்கள் புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மீட்கப்பட்டு, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • பிரசவ வலியிலிருந்த கர்ப்பிணிப் பெண் அயனாவரத்திலிருந்து மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • G-1 வேப்பேரி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் காவலர் 60683 ராஜசேகர் ஆகியோர் EVK சம்பத் சாலை-EVR சாலை சந்திப்பில் பணியிலிருந்தபோது, மின்சாரம் தாக்கியதில், மேற்படி காவலர் ராஜசேகர் மயங்கி விழுந்தார். உடனடியாக, இவர்கள் இருவரும் கீழ்ப்பாக்கம் அப்பலோ பர்ஸ்மெட் மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • R-6 குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் தெருவில், படுக்கையில் இருந்த புற்று நோயாளி மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
  • கட்டுமானப் பணி ஊழியரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மதுனுமுர்மு என்பவர், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு அருகே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியது. உடனடியாக, இவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • கொடுங்கையூரைச் சேர்ந்த மாநகராட்சி ஊழியர் ரமேஷ் என்பவர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியே பணிக்கு வந்துகொண்டிருந்தபோது, அவர் மீது ஒரு மரம் விழுந்ததில், தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இவர் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு : அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை பெருநகர காவல்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

காவலர் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள்: துணை ஆணையர்கள் ஆயுதப்படை மற்றும் மோட்டார் வாகனம் ஆகியோர்கள் தலைமையில் மூன்று தனிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் சென்னைபெருநகர காவல் எல்லையில் உள்ள காவலர் குடியிருப்புகளுக்குச் சென்று அங்கு மழை நீர் தேங்கியிருப்பதை அப்புறப்படுத்தியும், மேலும் அவர்களுக்கு வேண்டிய தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறைக்கு உதவி கோரி வந்த தொலைபேசி அழைப்புகள்: 04.12.2023 முதல், சென்னை பெருநகர கட்டுப்பாட்டறையில் மீட்பு நடவடிக்கை, உணவு, குடிநீர், தங்குமிடம், வாகனம், போக்குவரத்து மற்றும் மருத்துவ உதவி கோரி, 1419 தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு, அனைத்து அழைப்புகளுக்கும் சென்னை பெருநகர காவல் குழுவினர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மூலம் தேவையான உதவிகள் செய்யப்பட்டன.

அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏன்? - இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறும்போது, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2500 கனஅடி தண்ணீர் மட்டும் தற்போது திறக்கப்படுகிறது. ஆனால், அடையாறு ஆற்றினுடைய மற்ற பகுதிகளான ஆதனூர், கீழ்க்கட்டளை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மொத்தமாக, அடையாறு ஆற்றில் 37,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அந்த 37,000-ல், 2500 கனஅடி மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரியினுடைய பங்கு. மற்றவை பிற பகுதிகளில் இருந்து வந்துகொண்டிருப்பவை. ஆனால், படிப்படியாக அந்த தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது” என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > 866 இடங்களில் வெள்ளம், மீட்பு பணிகளில் 75,000 பேர், 4% பகுதிகளில் மின்தடை: தமிழக அரசு அப்டேட் @ மிக்ஜாம் பாதிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x