மிக்ஜாம் புயல் | மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு - பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை பெருமழை | படம்: ஆர்.ரகு
சென்னை பெருமழை | படம்: ஆர்.ரகு
Updated on
2 min read

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பொழிந்து வருவதாலும், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் அதிக அளவில் வெள்ள நீர் செல்வதாலும், ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் மழை நீர் இன்னும் வடியாமல் இருக்கின்றது.இந்நிலையில் அரசு எடுத்துவரும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "மிக்ஜாம் புயல் வலுவடைந்து 5.12.23 செவ்வாய்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அரசும் அத்தியாவசியப் பணி அமைப்புகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளையும் (0 5.12.2023 செவ்வாய்கிழமை) பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பொழிந்து வருவதாலும், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில் அதிக அளவில் வெள்ள நீர் செல்வதாலும், ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் மழை நீர் இன்னும் வடியாமல் இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, காவல் துறை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிருவாகங்கள் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் நல்கி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இம் முகாம்களில் மக்கள் சிரமமின்றி தங்குவதற்கு ஏதுவாக உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1913, 25619206/207/208 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in