Last Updated : 03 Dec, 2023 06:26 PM

1  

Published : 03 Dec 2023 06:26 PM
Last Updated : 03 Dec 2023 06:26 PM

“பிரதமரிடம் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே பாஜக தேர்தல் வெற்றிகள்” - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: பிரதமர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே பாஜகவின் வெற்றிகள் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோருக்கு புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அதிக தொகுதிகளைக் கைப்பற்றி வென்றுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் முதல்வராக உள்ள ரங்கசாமி, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி: ''சமீபத்தில் நடந்த 4 மாநிலத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இந்த வெற்றியானது மக்கள் பிரதமர் மீது வைத்திருக்கும் உண்மையான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது. நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய சேவைக்கான வெற்றியாகவும் அமைந்துள்ளது. உலக அளவில் சிறந்த தலைவராக பிரதமர் மோடி விளங்குவதை வெற்றி நிரூபிக்கிறது. மேலும், இந்திய மக்கள் பிரதமர் மோடியின் மீது வைத்திருக்கும் அன்பையும் வெற்றிகள் வெளிப்படுத்தியுள்ளன. இத்தருணத்தில் பிரதமரை வாழ்த்துகிறேன்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பிய கடிதத்தில், "மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை ஆட்சியை அமைக்கும் அளவுக்கு சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்திற்கு தங்களின் கடின அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பும், மத்திய அரசின் திறமையான அரசியல் திறமையும் இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணம். இந்த வெற்றி இந்த தேசத்தின் மக்களுக்கு நிச்சயமாக புதிய நம்பிக்கையையும் பிரகாசமான வழியையும் கொண்டு வரும் என்று நான் கருதுகிறேன். இந்த மகத்தான வெற்றிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசியத்தலைவர் நட்டாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ,"நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வலுவான ஜனநாயக நாடாகப் போற்றப்படும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வலிமையான தேசியக் கட்சி பாஜக என்பதை இந்தத் தேர்தல்கள் மீண்டும் நிரூபித்துள்ளன. தேசத்தைப் பாதுகாப்பதிலும், அதன் பெருமையை நிலைநாட்டுவதிலும், மக்கள் நலனிலும் பாஜக அரசுக்கு இந்த வெற்றிக்கு உந்து சக்தியாக உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த வெற்றி தருணத்தில் உங்களுடனும் உங்கள் கட்சி தொண்டர்களுடனும் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x