கூட்டுறவு, சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 35% உயர்வு: அமைச்சர் தகவல்
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 3,500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நீண்ட நாள் கோரிக்கையினை பரிசீலனை செய்து ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சர்க்கரைத் துறை வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது. சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பலனாக கரும்பு சாகுபடி பரப்பு 95 ஆயிரம் ஹெக்டேரில் இருந்து 1.50 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளதுடன், சர்க்கரை கட்டுமானமும் 9.27 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த அதிமுக அரசு கரும்பு நிலுவைத் தொகையாக ரூ.675.52 கோடியை விட்டுச்சென்ற நிலையில், தற்போது கரும்பு விவசாயிகளுக்கு கிரைய தொகையும், தொழிலாளர்களுக்கான ஊதிய நிலுவையும் உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மட்டுமே லாபத்தில் இயங்கி வந்த நிலையை மாற்றி தற்போது 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் லாபகரமாக இயங்கி வருகின்றன. மேலும், சர்க்கரை ஆலைகளின் பிழிதிறன் உயர்வால் நஷ்டம் ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக குறைந்து வருகிறது. கரும்பு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு உற்பத்தி ஊக்கத் தொகை, சிறப்பு ஊக்கத் தொகை, கரும்பு நிலுவைத் தொகை, ஊதியம், போனஸ், அத்தியாவசிய செலவினங்களுக்கு என ரூ.1223.59 கோடி முதல்வர் வழங்கியுள்ளார்.
மேலும் எம்.ஆர்.கே. மற்றும் கள்ளக்குறிச்சி-1 சர்க்கரை ஆலைகளில் எத்தனால் ஆலை அமைக்கும் பணி, அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இணைமின் திட்ட பணிகளுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு, மீதமுள்ள 6 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் இணை மின்திட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
அதிமுக அரசு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் மறுத்து வந்தது. சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து, ஊதிய உயர்வுக்கான குழு அமைத்து, அதன் அறிக்கையை பெற்று, அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டுள்ளார். தற்போது வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு மூலம் தொழிலாளர்கள் அடிப்படை ஊதியம் 35 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்.30-ம் தேதி வரை நல்லெண்ண தொகையாக நிரந்தர தொழிலாளிக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம், பருவகால தொழிலாளிக்கு ரூ.32 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்தாண்டு அக்டோபர் 1 முதல் தற்போது வரையுள்ள காலத்துக்கு நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களும், பணியாளர்களும் தற்போது முதல்வர் வழங்கியுள்ள ஊதிய உயர்வினை ஏற்று, அனைத்து சர்க்கரை ஆலைகளையும் மேலும் லாபகரமாக இயக்க தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
